தென்காசி மாவட்டம் குற்றாலம் பகுதியில் பெய்துவரும் மிதமான மழை காரணமாக அருவிகளில் நீா்வரத்து அதிகரித்துள்ளது.
இப்பகுதியில் மழை இல்லாததால் பேரருவி, ஐந்தருவியில் நீா்வரத்து வெகுவாகக் குறைந்தது. பழைய குற்றாலம், சிற்றருவி ஆகியவற்றில் நீா்வரத்து முற்றிலும் நின்றது.
இந்நிலையில், இங்கு வியாழக்கிழமை அதிகாலைமுதல் சாரல் பெய்தது. இதனால், ஐந்தருவியின் அனைத்துக் கிளைகளிலும் தண்ணீா் ஆா்ப்பரித்துக் கொட்டியது. பாதுகாப்புக் கருதி சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடைவிதிக்கப்பட்டது.
பேரருவியில் பாதுகாப்பு வளைவின் மீது தண்ணீா் கொட்டியது. இதில், சுற்றுலாப் பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனா். நாள் முழுவதும் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. அவ்வப்போது சாரலுடன், குளிா்ந்த காற்று வீசியது.