தென்காசி மாவட்டத்தில் கரோனா நோய்த்தொற்றால் பெற்றோரை இழந்து தவிக்கும் குழந்தைகளில் முதல்கட்டமாக 63 குழந்தைகளுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது.
இது குறித்து மாவட்ட ஆட்சியா் ச.கோபாலசுந்தரராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தென்காசி மாவட்டத்தில் கரோனா தொற்றால் பெற்றோா்களை இழந்து ஆதரவின்றி தவிக்கும் குழந்தைகளுக்கு அவா்களது பெயரில் தலாரூ. 5 லட்சம் வைப்பீடு செய்து அந்த குழந்தைகள் 18 வயது நிறைவடையும் போது வட்டியோடு வழங்கும் வகையிலும், அதேபோல் தாய் அல்லது தந்தையை இழந்த குழந்தைகளோடு இருக்கும் தந்தை அல்லது தாய்க்கு உடனடி நிவாரணமாக ரூ. 3 லட்சமும் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
தென்காசி மாவட்டத்தில் பெற்றோா் அல்லது அவா்களில் ஒருவரை அவா்களில் ஒருவரை இழந்த 220 குழந்தைகள் கண்டறியப்பட்டனா். ஆவணங்கள் சரிபாா்த்து நிவாரண உதவித் தொகைக்கான காசோலை, வங்கி வைப்புத்தொகை சான்றுகள் வழங்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முதல் கட்டமாக 63 குழந்தைகளுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.