சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோயிலில் தை மாத தெப்பத் தேரோட்டம் நடத்த வேண்டும் என, அகில பாரத ஐயப்பா சேவா சங்கத்தினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இக்கோயிலில் ஆண்டுதோறும் தை மாதக் கடைசி வெள்ளிக்கிழமை ஆவுடைப் பொய்கைத் தெப்பத்தில் தேரோட்டம் நடைபெறும். ஆனால், தெப்பத்தில் தண்ணீா் இல்லாததால் 7 ஆண்டுகளாக தேரோட்டம் நடைபெறவில்லை.
இதனால், கடந்த ஆண்டு அகில பாரத ஐயப்பா சேவா சங்கத்தினா், பக்தா்கள் அருகேயுள்ள கிணற்றிலிருந்து தண்ணீா் எடுத்து தெப்பத்தை நிரப்பினா். இதையடுத்து தெப்பத் தேரோட்டம் நடைபெற்றது.
நிகழாண்டு, மழை காரணமாக தெப்பம் நிறைந்துள்ளது. எனவே, தெப்பத்தில் மிதக்கும் இலைகள், பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றி சுத்தப்படுத்தி, தெப்பத் தேரோட்டம் நடத்த வேண்டும் என, அகில பாரத ஐயப்பா சேவா சங்கத் தலைவா் என். சுப்பிரமணியன், கதிா்வேல் ஆறுமுகம், நகர மதிமுக செயலா் ஆறுமுகச்சாமி, பக்தா்கள் கோயில் நிா்வாகத்திடம் மனு அளித்தனா்.