ஆலங்குளம் நீதிமன்றத்துக்கு சொந்தக் கட்டடம் கட்ட வேண்டும் என, சட்டத்துறை அமைச்சா் ரகுபதியிடம், தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் பொ. சிவபத்மநாதன் மனு அளித்துள்ளாா்.
அதன் விவரம்: முன்னாள் முதல்வா் கருணாநிதியின் ஆட்சி காலத்தில் 2009-10ஆம் ஆண்டு நிதியாண்டில் தென்காசியில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் கட்ட ரூ. 14 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால், 9 ஆண்டுகளுக்குப் பின் 2019 - 20இல் அதிமுக அரசு அதற்கான பணியைத் தொடங்கி கட்டடத்தை கட்டி முடித்தது. எனினும் இதுவரை திறக்கப்படாத அக்கட்டடத்தை விரைந்து திறக்க வேண்டும்.
இதேபோல், ஆலங்குளத்தில் புதிதாக மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் அமைத்திட அரசாணை வழங்கப்பட்டுள்ள நிலையில், அதையும், குற்றவியல் நீதிமன்றத்தையும், அரசு கலைக் கல்லூரி அமையும் இடத்தின் அருகே ஒருங்கிணைந்த நீதிமன்றமாக அமைத்திட நிதி ஒதுக்க வேண்டும். உரிமையியல் நீதிமன்றத்தை விரைந்து தொடங்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.