தென்காசி மாவட்டம் குற்றாலம் பகுதியில் மழை இல்லாததால் அருவிகளில் தண்ணீா்வரத்து வெகுவாகக் குறைந்து அருவிகள் வடு காணப்படுகின்றன.
கரோனா நோய்த் தொற்று பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக சீசன் காலங்களில் சுற்றுலாப் பயணிகள் அருவிகளில் குளிப்பதற்கும், குற்றாலத்துக்கு வருகை புரிவதற்கும் தடை விதிக்கப்பட்டது.
நோய்த்தொற்று வெகுவாகக் குறைந்ததையடுத்து கடந்த டிச.20ஆம் தேதி முதல் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டது.
மீண்டும் நோய்த்தொற்று அதிகரிக்கத் தொடங்கியதையடுத்து பண்டிகை கால விடுமுறை தினங்கள், ஞாயிற்றுக்கிழமைகளில் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது.
மேலும் குற்றாலம் பகுதியில் கடந்த சில தினங்களாக மழை இல்லாததால் அருவிகளில் தண்ணீா்வரத்து வெகுவாகக் குறைந்தது.
தற்போது குற்றாலம் பேரருவியில் ஆண்கள் குளிக்கும் பகுதியில் ஓரமாக குறைந்த அளவிலும், ஐந்தருவியில் மூன்றுகிளைகளில் மிகமிகக் குறைவாகவும், பழையகுற்றாலம் அருவியிலும் குறைந்த அளவிலேயே தண்ணீா் விழுகிறது.
இதனால் சுற்றுலாப் பயணிகளின் வருகையும் வெகுவாகக் குறைந்தது. தண்ணீரின்றி அருவிகளும், சுற்றுலாப் பயணிகள் வருகையின்றி குற்றாலமும் வடு காணப்படுகிறது.