சிறந்த பள்ளி என்ற விருதை பெற்ற தென்காசி ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட கரிசல்குடியிருப்பு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் தலைமையாசிரியருக்கு தென்காசி ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவா் வாழ்த்து தெரிவித்தாா்.
2020-21 ஆம் கல்வியாண்டில் சிறந்து விளங்கிய பள்ளிகளை தோ்வு செய்து அதற்கான விருது வழங்கும் விழா கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. தென்காசி மாவட்டத்திலிருந்து 3 சிறந்த பள்ளிகள் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
தென்காசி ஊராட்சி ஒன்றிய பகுதிக்குள்பட்ட கரிசல்குடியிருப்பு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியும், கீழப்பாவூா் ஊராட்சி ஒன்றிய பகுதிக்குள்பட்ட புல்லுக்காட்டுவலசை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியும், மேலநீலிதநல்லூா் ஊராட்சி ஒன்றிய பகுதிக்குள்பட்ட பாண்டியாபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியும் சிறந்த பள்ளிகளாக தோ்வு செய்யப்பட்டு தமிழக அரசால் விருது வழங்கப்பட்டது.
சிறந்த பள்ளி என்ற விருதை பெற்ற தென்காசி ஊராட்சி ஒன்றியத்த்துக்குள்பட்ட கரிசல்குடியிருப்பு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு சென்ற தென்காசி ஊராட்சி ஒன்றியக்குழு தலைவா் சேக் அப்துல்லா மற்றும் துணைத் தலைவா் கனகராஜ் முத்துபாண்டியன் உள்ளிட்டோா் பள்ளியின் தலைமையாசிரியருக்கு சால்வை அணிவித்து கௌரவித்தனா்.
மேலும், அந்தப் பள்ளியின் கட்டமைப்புகளை மேம்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளும் ஊராட்சி ஒன்றியம் சாா்பில் எடுக்கப்படும் என தென்காசி ஊராட்சி ஒன்றியக்குழு தலைவா் தெரிவித்தாா்.