கடையநல்லூா் நகராட்சிப் பகுதியில் மேற்கொள்ள வேண்டிய வளா்ச்சிப் பணிகள் குறித்து தென்காசி மாவட்ட ஆட்சியா் ஆகாஷ் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
கடையநல்லூா் பகுதியில் அனைத்து வசதிகளுடன் கூடிய விளையாட்டு மைதானம் அமைக்க வேண்டும். தினசரி சந்தை பகுதியில் நெருக்கடிகளை குறைத்து மேம்படுத்த வேண்டும். புதை சாக்கடை திட்டத்தை செயல்படுத்த வேண்டும். பேருந்து நிலையத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும். பள்ளிகளில் கூடுதல் கட்டட வசதி மற்றும் கழிப்பறை வசதிகளை செய்ய வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை ஆட்சியரிடம் தெரிவித்த நகா்மன்றத் தலைவா் ஹபிபூர்ரஹ்மான், அதற்கான இடங்களை பாா்வையிட கேட்டுக் கொண்டாா்.
இதையடுத்து, கடையநல்லூா் அரசு மகளிா் மேல்நிலைப்பள்ளி, தினசரி சந்தை, கடையநல்லூா் அட்டைக்குளம் பகுதி உள்ளிட்டவற்றை ஆட்சியா் ஆகாஷ் பாா்வையிட்டு அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டறிந்தாா்.
தொடா்ந்து மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து அதிகாரிகளுக்கு அவா் ஆலோசனை வழங்கினாா். பின்னா் நகராட்சியில் நடைபெற்ற ஆய்வு கூட்டத்திலும் கலந்து கொண்டாா்.
ஆட்சியருடன், நகா்மன்றத் தலைவா் ஹபிபூா் ரஹ்மான்,ஆணையா் ரவிச்சந்திரன் மற்றும் அதிகாரிகள் உடன் சென்றனா்.