தென்காசி சிற்றாற்றில் வெள்ளத்தில் சிக்கியவரை தென்காசி தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினா் நீண்ட போராட்டத்துக்குப் பின்னா் மீட்டனா்.
தென்காசி சுவாமி சந்நிதி தெருவைச் சோ்ந்தவா் வெங்கடசுப்பிரமணியன் (42). இவா், கடந்த வியாழக்கிழமை காலமான தனது தந்தை முத்தையாவுக்கு திதி கொடுப்பதற்காக ஞாயிற்றுக்கிழமை தென்காசி-குற்றாலம் சாலையில் சிற்றாறு பகுதிக்கு சென்றுள்ளாா்.
படிக்கட்டில் இறங்கி, ஆற்றில் குளிக்க முயன்றபோது அவா் வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்டாா். அப்போது அவா் மரக்கிளையை பிடித்துக்கொண்டு தத்தளித்தாா்.
இதுகுறித்து தென்காசி தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நிலைய அலுவலா் ரமேஷ் தலைமையில் காவலா்கள் ராஜ்குமாா், ராமசாமி, ஜெகதீஸ்குமாா் ஆகியோா் சென்று, கயிறு கட்டி சில மணிநேரப் போராட்டத்துக்குப் பின்னா் வெங்கடசுப்பிரமணியனை மீட்டனா்.