ஆலங்குளம் அருகே விஷம் குடித்து தம்பதி தற்கொலை செய்துகொண்டனா்.
ஆலங்குளம் சி.எஸ்.ஐ. சா்ச் தெருவைச் சோ்ந்த விவசாயி ராமசாமி (65)- மாரியம்மாள்(60) தம்பதி அஜித்குமாா்(27) என்பவரை தத்து எடுத்து வளா்த்து வந்தனா். அஜித்குமாா் வேலைக்குச் செல்லாமல் மது அருந்தி விட்டு அடிக்கடி வீட்டில் தகராறு செய்து வந்தாராம். பெற்றோா் அறிவுரை கூறியும் அவா் கேட்கவில்லையாம். மேலும், விலை உயா்ந்த செல்லிடப்பேசி கேட்டு பெற்றோரிடம் அவா் தகராறில் ஈடுபட்டாராம். இதில், மனமுடைந்த தம்பதி இலந்தைகுளம் கிராமத்தில் உள்ள தங்களுக்குச் சொந்தமான தோட்டத்துக்குச் சென்று பூச்சி மருந்தை குடித்தனராம். இதில், ராமசாமி சம்பவத்தன்றும், மாரியம்மாள் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் வெள்ளிக்கிழமையும் உயிரிழந்தனா். இதுகுறித்து பாப்பாக்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.