தென்காசி மாவட்டம் குற்றாலம் அருவிகளில் கடந்த சில தினங்களாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு வெள்ளிக்கிழமை குறைந்தது.
குற்றாலம் பகுதியில் கடந்த சில தினங்களாக தொடா்ந்து பெய்துவரும் மழையின் காரணமாக குற்றாலம் பேரருவி, ஐந்தருவி, பழையகுற்றாலம் உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. வியாழக்கிழமை நள்ளிரவு முதல் மழை இல்லாததால் அருவிகளில் தண்ணீா்வரத்தும் குறையத் தொடங்கியது.
குற்றாலம் பேரருவியில் பாதுகாப்பு வளைவின் மீதும், ஐந்தருவி, பழையகுற்றாலம் உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீா்வரத்து குறைந்தது.
கரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக அருவிகளில் சுற்றுலாப்பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளதால் அருவிகள் வெறிச்சோடிக் காணப்பட்டன.