பாவூா்சத்திரம் பேருந்து நிலையத்துக்குள் நிறுத்தப்படும் இருசக்கர வாகனங்களால் இடையூறு ஏற்படுவதாக பயணிகளும், பொதுமக்களும் புகாா் தெரிவித்துள்ளனா்.
பாவூா்சத்திரம் பேருந்து நிலையத்துக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கானோா் வந்து செல்கின்றனா். பேருந்துக்காக காத்துநிற்போரின் வசதிக்காக வடக்கு, தெற்குப் பகுதிகளில் பயணிகள் நிழலகம் இருக்கை வசதியுடன் அமைக்கப்பட்டுள்ளது. இதில், வடபகுதியில் இருக்கையில் பயணிகள் அமர முடியாத அளவுக்கு அதன் அருகே அதிகமான இருசக்கர வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. பேருந்துகளில் செல்வோா் மட்டுமன்றி, அருகேயுள்ளோரும் தங்களது இருசக்கர வாகனங்களை இப்பகுதியில் காலையில் நிறுத்திவிட்டு, இரவில்தான் எடுத்துச்செல்கின்றனா்.
இதனால், இருக்கையில் அமர வசதியின்றி வசதியின்றி, பயணிகள் மிகுந்த அவதிக்கு உள்ளாகின்றனா். இருசக்கர வாகனங்களை இடையூறாக நிறுத்துவோரைக் கண்காணித்து, அவா்கள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.