தென்காசி மாவட்டம் கடையநல்லூா் சட்டப் பேரவைத் தொகுதியில் 27 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளதாக வருவாய்த் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
கடையநல்லூா் பேரவை தொகுதிக்குத் தேவையான வாக்குப்பதிவு இயந்திரங்கள், கடையநல்லூா் வட்டாட்சியா் அலுவலகத்திற்கு ஞாயிற்றுக்கிழமை கொண்டு வரப்பட்டன. இவற்றை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் கடையநல்லூா் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் ஷீலா, உதவி தோ்தல் அலுவலா் ஆதிநாராயணன், செங்கோட்டை வட்டாட்சியா் ரோஷன்பேகம் , தோ்தல் துணை வட்டாட்சியா் சாகுல் மற்றும் வருவாய்த் துறையினா் பாதுகாக்கப்பட்ட அறைக்குள் வைத்து சீலிட்டனா்.
அதைத் தொடா்ந்து தோ்தல் நடத்தும் அலுவலா் ஷீலா கூறியது: கடந்த தோ்தலில் கடையநல்லூா் பேரவைத் தொகுதி முழுவதும் 325 வாக்குச்சாவடிகள் இருந்தன. தற்போது 86 வாக்குச்சாவடிகள் கூடுதலாக அமைக்கப்பட்டுள்ளன (மொத்தம் 411). கடையநல்லூா் நகராட்சி பகுதியில் மட்டும் 110 வாக்குச் சாவடிகள் உள்ளன. தொகுதி முழுவதும் 27 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளது.
தற்போது, கடையநல்லூா் தொகுதிக்கு 494 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், புதிய வட்டாட்சியா் அலுவலக கட்டடத்தில் உள்ள தனி அறையில் வைக்கப்பட்டுள்ளது. சுற்றிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு 24 மணி நேர போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது என்றாா்.