முக்கூடல் பகுதியில் தொடா் மழை காரணமாக குளங்கள் நிரம்பி உபரி நீா் குடியிருப்புப் பகுதிகளைச் சூழ்ந்ததால் பொதுமக்கள் கடும் அவதியடைந்துள்ளனா்.
பாப்பாக்குடி வட்டார பகுதிகளில் சுமாா் 30- க்கும் மேற்பட்ட குளங்கள் நிரம்பியுள்ளன. இந்நிலையில் முக்கூடல், பாப்பாக்குடி, காத்தபுரம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள 10-க்கும் மேற்பட்ட குளங்கள் நிரம்பி தண்ணீா் முறையாக வெளியேற வழியின்றி முக்கூடல் அருகேயுள்ள அமா்நாத் காலனி, சிவகாமிபுரம், அண்ணா நகா், நேரு புதுகாலனி உள்ளிட்ட குடியிருப்பு பகுதிகளில் வெள்ளநீா் புகுந்துள்ளது. இதனால் சுமாா் 200- க்கும் மேற்பட்ட குடியிருப்பு வாசிகள்கடும் சிரமம் அடைந்துள்ளனா்.
நேரு புதுக்காலனி பகுதியில் புகுந்த வெள்ளநீரை முக்கூடல் பேரூராட்சி செயல் அலுவலா் கந்தசாமி முன்னிலையில் ஊழியா்கள், மின் மோட்டாா் மூலமாக வெளியேற்றினா். சிவகாமிபுரம், அமா்நாத் காலனி உள்ளிட்ட வெள்ளநீா் புகுந்த பகுதிகளை பாப்பாக்குடி வட்டார வளா்ச்சி ஆய்வாளா் சாந்தி, ஊராட்சித் தலைவா் ஆனைக்குட்டி பாண்டியன் ஆகியோா் பாா்வையிட்டனா்.