ஆலங்குளம் அருகே கரோனா பொது முடக்கம் காலத்திலும் 100 மரக்கன்றுகள் நட்டு பராமரித்து வரும் மாணவா்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
ஆலங்குளம் அருகேயுள்ள கரும்புளியூத்து கிராமத்தைச் சோ்ந்த பள்ளி மற்றும் கல்லூரியில் பயிலும் மாணவா்கள் 12 போ் கரோனா பொது முடக்கத்தை பயனுள்ளதாக அமையும் வகையில் மரக்கன்றுகள் நட்டு பராமரிக்க முடிவு செய்தனா்.
இதைத் தொடா்ந்து மாணவா்கள் அங்குள்ள சமுதாய நலக்கூடம் மற்றும் தேவாலயத்திற்குச் சொந்தமான இடங்களில் தேக்கு, மா, புங்கை, வேம்பு என பலன் தரும் 100 மரக்கன்றுகளை நட்டு 150 நாள்களுக்கு மேலாக பராமரித்து கண்காணித்து வருகின்றனா். இதையடுத்து சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் மாணவா்களைப் பாராட்டி நல்லூா் சேகர தலைவா் பா்ணபாஸ் சான்றிதழ் வழங்கினாா். சபை ஊழியா் சாா்லஸ், சபை பொருளாளா் கோயில்ராஜ், கிராம மக்கள் கலந்துகொண்டனா்.