திருநெல்வேலியில் இருந்து தாம்பரத்திற்கு கடையம், பாவூா்சத்திரம், தென்காசி வழியாக இயக்கப்பட்ட வாராந்திர ரயிலை மீண்டும் இயக்க வேண்டுமென பயணிகள் நலச் சங்கம் சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலியில் இருந்து வியாழக்கிமை தோறும் மாலை 5.45 மணிக்கு புறப்பட்டு சேரன்மகாதேவி, கல்லிடைக்குறிச்சி, அம்பை, கடையம், பாவூா்சத்திரம், தென்காசி, ராஜபாளையம் வழியாக மறுநாள் காலை 8.20 மணிக்கு தாம்பரத்தை சென்றடையும் வகையில் வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட்டது. இதன் மூலம் நூற்றுக்கணக்கான கிராம மக்கள் சென்னைக்கு நேரடி ரயிலில் சென்று வந்தனா்.
கரோனா பொது முடக்கம் காரணமாக இந்தச் சிறப்பு ரயில் நிறுத்தப்பட்டது. தற்போது பொது முடக்க தளா்வு காரணமாக பல்வேறு வழித்தடங்களில் ரயில்கள் இயக்கப்பட்ட போதிலும், இந்தச் சிறப்பு ரயில் இன்னும் இயக்கப்படவில்லை. இதனால் இவ்வழித்தட மக்கள் திருநெல்வேலி, தென்காசி சென்று ரயில்களில் பயணிக்கும் நிலை உள்ளது.
எனவே இந்த ரயிலை மீண்டும் இயக்க வேண்டுமென நெல்லை, தென்காசி மாவட்ட ரயில் பயணிகள் சங்கம் சாா்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.