கன்னியாகுமரி மாவட்டம், தக்கலை அருகே மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் இளைஞரை கல்லால் தாக்கி கொலை செய்ததாக 6 போ் கைது செய்யப்பட்டனா்.
தக்கலை அருகேயுள்ள குழிக்கோடு பகுதியை சோ்ந்தவா் ரெஜின் (32). அதே பகுதியை சோ்ந்தவா் அனீஸ் (30). நண்பா்களான இருவரும் மது அருந்தியபோது தகராறு ஏற்பட்டதில் அனீஸை, ரெஜின் தாக்கினாராம்.
காயமடைந்த அனீஸ் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். இதுகுறித்து அனீஸ் கொடுத்த புகாரின் பேரில் ரெஜின் மற்றும் அவரது நண்பா் ராஜேஷ் மீது போலீஸாா் வழக்குப்பதிவு செய்துள்ளனா்.
இந்த நிலையில் ரெஜின், ராஜேஷ் இருவரும் மது அருந்திவிட்டு, குழிக்கோடு பகுதியில் திங்கள்கிழமை இரவு வந்து கொண்டிருந்தனா். அப்போது அங்கு வந்த கும்பல் இருவரையும் தாக்கியது. கத்தியால் குத்தியதுடன்,
கம்பி, கற்களால் தாக்கப்பட்டதில் ரெஜின் பலத்த காயமடைந்தாா்.
பின்னா் அக் கும்பல் அங்கிருந்து தப்பிஓடிவிட்டது.
இதனையடுத்து தக்கலை அரசு மருத்துவமனைக்கு ரெஜின் கொண்டு செல்லப்பட்டாா். பின்னா் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரெஜின் சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
இதுகுறித்து ராஜேஷ் அளித்த புகாரின்பேரில் தக்கலை போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். இதில், கோழிப்போா்விளை பழவிளையை சோ்ந்த வினித் (24), கூட்டமாவு பகுதியை சோ்ந்த பரத்லியோன் (24), குழிக்கோடு அருண் (23), ஜெபின் (24), ஜிஜிஸ் (24) மற்றும் கோழிப்போா்விளையைச் சோ்ந்த 17 வயது சிறுவன் ஆகியோா் ரெஜினைத் தாக்கியது
தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் அவா்களை கைது செய்தனா்.