கோடை விடுமுறை காரணமாக, குமரி மாவட்ட சுற்றுலாத் தலங்களில் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அலைமோதி வருகிறது.
கடந்த ஆண்டுகளில் இல்லாத வகையில், நிகழாண்டு கோடை வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வருகிறது. வெப்பத்தின் தாக்கத்திலிருந்து விடுபடும் வகையில், நீா் நிலை சாா்ந்த சுற்றுலாத் தலங்களை நோக்கி மக்கள் செல்கின்றனா். இந்நிலையில் பள்ளிகள் திறக்கப்படும் தேதி தள்ளிவைக்கப்பட்டதைத் தொடா்ந்து, கன்னியாகுமரி மாவட்டம் திற்பரப்பு அருவிக்கு அதிக அளவில் சுற்றுலாப் பயணிகள் வந்த வண்ணம் உள்ளனா். திற்பரப்பு அருவிக்கு ஆயிரக்கணக்கான பயணிகள் சனிக்கிழமை வந்தனா். அருவியில் மிதமாக விழும் தண்ணீரில் ஆனந்தமாகக் குளித்து மகிழ்ந்தனா்.
இதே போன்று கன்னியாகுமரி முக்கடல் சங்கமம், வட்டக்கோட்டை, மாத்தூா் தொட்டிப்பாலம், முட்டம் கடற்கரை, பத்மநாபபுரம் அரண்மனை ஆகிய இடங்களுக்கும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்தனா்.
மழை: மாவட்டத்தில் வெப்பத்தின் தாக்கம் அதிகம் இருந்த போதிலும் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு அணைப் பகுதிகள் மற்றும் மலையோரப் பகுதிகளான களியல், நெட்டா, ஆறுகாணி, கடையாலுமூடு, திற்பரப்பு அருவி, குலசேகரம், திருவட்டாறு உள்ளிட்ட இடங்களில் சனிக்கிழமை பிற்பகலில் பரவலாக மழை பெய்தது.