கன்னியாகுமரி மாவட்டத்தில் மேற்கு கடலோரப் பகுதிகளில் மீன்பிடி தடைக்காலம் ஜூன் 1 முதல் ஜூலை 31 வரையிலும் அமல்படுத்தப்படவுள்ளது.
இதுகுறித்து குமரி மாவட்ட ஆட்சியா் பி.என். ஸ்ரீதா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: நடப்பாண்டில் கன்னியாகுமரி மாவட்ட மேற்கு கடலோரப் பகுதிகளில் மீன்பிடி தடைக்காலம் ஜூன் 1 முதல் ஜூலை 31 வரையிலும் அமல்படுத்தப்படவுள்ளது. எனவே, மேற்கு கடலோரப் பகுதியில் மீன்பிடி தொழில் செய்யும் மீன்பிடி விசைப்படகுகள்/இழுவைப்படகுகள்/ஆழ்கடல் விசைப்படகுகள்/செவுள் வலை மற்றும் சூரை மீன்பிடி விசைப்படகுகள் பயன்படுத்தி மீன்பிடிப்பது 61 நாள்களுக்கு தடை விதிக்கப்படுகிறது. ஆகவே, கன்னியாகுமரி மாவட்ட மேற்கு கடலோரப் பகுதிகளை தங்கு தளமாக கொண்டு மீன்பிடி தொழில் செய்துவரும் அனைத்து விசைப்படகுகளும் இம்மாதம் 31ஆம் தேதிக்குள் தத்தமது மீன்பிடி துறைமுகங்களுக்கு கரை திரும்பிடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும், இத்தடையை மீறி மீன்பிடித் தொழில் புரியும் மீன்பிடி
விசைப்படகுகள் மீதும், இம்மாதம் 31 ஆம் தேதிக்குள் கரை திரும்பாத விசைப்படகுகளுக்கு தங்குதள அனுமதி மறுப்பதோடு தமிழ்நாடு கடல் மீன்பிடிப்பு ஒழுங்குப்படுத்தும் சட்ட விதிகள் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா்.