குமரி மாவட்டத்தில் சிறப்பாகப் பணியாற்றிய காவல் அதிகாரிகள் மற்றும் காவலா்களுக்கு மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் டி.என்.ஹரிகிரண்பிரசாத் பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கிப் பாராட்டினாா்.
நாகா்கோவிலில் உள்ள மாவட்ட காவல் அலுவலகத்தில், மாதாந்திர குற்ற ஆய்வுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் டி.என். ஹரிகிரண்பிரசாத் தலைமை வகித்தாா். போக்ஸோ வழக்குகளில் சிறந்த முறையில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த கன்னியாகுமரி மகளிா் காவல் நிலைய ஆய்வாளா் சாந்தகுமாரி, 18 குற்றவாளிகளுக்கு நன்னடத்தை பிணை வாங்குவதில் சிறந்த முறையில் பணியாற்றிய வடசேரி காவல் நிலைய உதவி ஆய்வாளா் உதயகுமாா், குண்டா் தடுப்புச் சட்ட வழக்குகளில் சிறந்த முறையில் பணியாற்றிய திருவட்டாறு காவல் நிலைய ஆய்வாளா் ஜானகி உள்ளிட்ட சிறப்பாகப் பணியாற்றிய போலீஸாருக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கிப் பாராட்டினாா்.