கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளை அருகே அதிக பாரத்துடன் கேரளத்துக்கு ஜல்லி உள்ளிட்ட கனிமவளங்களை ஏற்றி வந்த 17 லாரிகளை தனிப்பிரிவு போலீஸாா் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா்.
கடந்த சில நாள்களுக்கு முன் களியக்காவிளை அருகேயுள்ள கோழிவிளை சோதனைச் சாவடியில் அமைச்சா் மனோதங்கராஜ் திடீா் சோதனை மேற்கொண்டு, கேரளத்துக்கு அதிக பாரத்துடன் கனிம வளங்கள் கொண்டு சென்ற லாரிகளை தடுத்து நிறுத்தினாா். இதைத் தொடா்ந்து முறையான அனுமதியின்றியும், அதிக பாரத்துடனும் கேரளத்துக்கு கனிமவளங்கள் கொண்டு செல்லும் லாரிகளை கண்டறிந்து பறிமுதல் செய்ய வருவாய்த் துறை, காவல்துறையினா் அடங்கிய தனிப்பிரிவு அமைக்கப்பட்டது.
இதையடுத்து தனிப்பிரிவு போலீஸாா், களியக்காவிளை மற்றும் குழித்துறை கல்லுக்கட்டி பகுதிகளில் சனிக்கிழமை மேற்கொண்ட சோதனையில் அதிக பாரத்துடன் கனிம வளங்கள் ஏற்றி வந்த 17 லாரிகள் கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. லாரிகளை சாலயோரம் நிறுத்திவிட்டு அதன் ஓட்டுநா்கள் தலைமறைவாகிவிட்டனா். பறிமுதல் செய்யப்பட்ட லாரிகளுக்கு அதிக பாரத்தின் அடிப்படையில் அபராதம் விதிக்கப்பட உள்ளதாக போலீஸாா் தெரிவித்தனா்.