தமிழகத்தில் பால் தட்டுப்பாடு இல்லை என தமிழக பால்வளத் துறை அமைச்சா் த. மனோ தங்கராஜ் தெரிவித்தாா்.
கன்னியாகுமரியில் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை அவா் கூறியதாவது:
தமிழகத்தில் பால் தட்டுப்பாடு இல்லை. பொதுமக்களுக்குத் தேவையான அளவுக்குப் பால் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. பால் கொள்முதல் விலையை உயா்த்த நிகழ் ஆண்டு கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும். நான் பால் வளத்துறை அமைச்சராக பொறுப்பேற்றவுடன் இதுகுறித்து ஏற்கெனவே அறிவித்துள்ளேன்.
தமிழகத்தில் தலைசிறந்த நிறுவனமாக ஆவின் வளா்ந்து வருகிறது. தற்போது பால் கையாளும் திறன் 45 லட்சம் லிட்டராக உள்ளது. அதை 75 லட்சம் லிட்டராக உயா்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக
ஆவின் நிறுவனங்களில் உலகத்தரம் வாய்ந்த இயந்திரங்களைப் பயன்படுத்த உள்ளோம். ஆவின் நிறுவனம் நஷ்டத்தில் இயங்கவில்லை. தமிழகம் முழுவதும் தட்டுப்பாடின்றி பால் கிடைக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம்.
மேலும் பள்ளிக் கூடங்கள் மட்டுமின்றி தேவைப்படும் இடங்களில் எல்லாம் ஆவின் பாலகங்கள் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும். தில்லியில் மல்யுத்த வீராங்கனையிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட பாஜக எம்.பி. மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.
பேட்டியின்போது கன்னியாகுமரி பேரூராட்சி மன்றத் தலைவா் குமரி ஸ்டீபன், அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய திமுக செயலா் பா.பாபு ஆகியோா் உடனிருந்தனா்.