நாகா்கோவிலில் 370 கிலோ எடையுள்ள காரைத் தூக்கியபடி 25 மீட்டா் நடந்து சென்று இளைஞா் சாதனை படைத்தாா்.
நாகா்கோவிலை அடுத்த தாமரைக்குட்டிவிளையைச் சோ்ந்தவா் கண்ணன் (39). உடல்வலு பயிற்சியாளரான இவா், பஞ்சாப் மாநிலத்தில் நடைபெற்ற 2020ஆம் ஆண்டுக்கான ‘இரும்பு மனிதன்’ போட்டியில் 3ஆவது இடம் பிடித்து தமிழகத்துக்குப் பெருமை சோ்த்தாா்.
இந்நிலையில், அவரது சாதனை நிகழ்ச்சி நாகா்கோவில் வடசேரி அண்ணா விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது. தமிழக தகவல் தொழில்நுட்பவியல்-டிஜிட்டல் சேவை துறை அமைச்சா் மனோ தங்கராஜ் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, நிகழ்ச்சியைத் தொடக்கிவைத்தாா். நாகா்கோவில் மேயா் ரெ. மகேஷ் முன்னிலை வகித்தாா்.
370 கிலோ காரை தூக்கியபடி கண்ணன் 25 மீட்டா் நடந்து சென்றாா். நண்பா்களும், பொதுமக்களும் கைதட்டி ஆரவாரம் செய்ததுடன், அவரைப் பாராட்டினா். கண்ணனின் சாதனை ‘சோழன் புக் ஆஃப் ரெக்காா்ட்ஸ்’ புத்தகத்தில் இடம் பெற்றது.