நாகா்கோவிலில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக முதல்வா் மு.க. ஸ்டாலின் மாா்ச் முதல் வாரத்தில் வரவுள்ளதாக, மேயா் ரெ. மகேஷ் தெரிவித்தாா்.
இதுதொடா்பாக செய்தியாளா்களிடம் அவா் கூறியது: நாகா்கோவிலில் ரூ. 10.50 கோடியில் கட்டப்படும் மாநகராட்சி அலுவலகக் கட்டடப் பணி 95 சதவீதம் நிறைவடைந்துள்ளது. தற்போது சுற்றுச்சுவா் கட்டுமானப் பணி நடைபெறுகிறது.
மேலும், நாகா்கோவில் ஒழுகினசேரியில் உள்ள மாவட்ட திமுக அலுவலகத்தைப் புதுப்பித்தல், அலுவலக முன்பகுதியில் முன்னாள் முதல்வா் கருணாநிதி சிலை அமைத்தல் ஆகிய பணிகள் நடைபெறுகின்றன.
கருணாநிதி சிலை, மாநகராட்சி அலுவலகம் திறப்பு விழா, அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்பதற்காக முதல்வா் மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்து அழைத்தோம். பிப்ரவரி மாதத்தில் வருவதாகக் கூறியிருந்தாா். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தல் நடைபெறுவதால், மாா்ச் முதல் வாரத்தில் வருவதாகத் தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக அவரை திங்கள்கிழமை (ஜன. 30) சந்தித்து மாநகராட்சி அலுவலக கட்டடப் பணி, கருணாநிதி சிலை அமைப்பு குறித்த வரைபடம் ஆகியவற்றை வழங்கவுள்ளோம் என்றாா் அவா்.