கன்னியாகுமரி அரசுப் பள்ளியில் காலை உணவு சாப்பிட்ட என்சிசி மாணவா்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது தொடா்பாக தனியாா் உணவு விடுதிக்கு அதிகாரிகள் சனிக்கிழமை ‘சீல்’ வைத்தனா்.
கன்னியாகுமரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற என்சிசி முகாமில் காலை உணவு சாப்பிட்ட 43 மாணவா்-மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து, அவா்கள் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சைக்குப் பின்னா் வீடு திரும்பினா்.
இதுதொடா்பாக அகஸ்தீஸ்வரம் வட்டார உணவுப் பாதுகாப்பு அலுவலா் தங்கசிவம் தலைமையிலான அதிகாரிகள் கொட்டாரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் விசாரணை மேற்கொண்டனா்.
மாணவா்களுக்கு உணவுப் பொட்டலம் தயாரித்து வழங்கிய கன்னியாகுமரி வடக்கு குண்டல் பகுதியில் உள்ள தனியாா் உணவு விடுதி உரிமையாளரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. உரிமமின்றி நடத்தப்பட்டதால், அந்த விடுதிக்கு அதிகாரிகள் சீல் வைத்தனா். மாணவா்-மாணவிகள் சாப்பிட்ட இட்லி உள்ளிட்ட உணவுப் பொருள்களை அதிகாரிகள் கைப்பற்றி பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள நுண்ணறிவு ஆய்வுக் கூடத்துக்கு அனுப்பிவைத்தனா்.
மேலும், கொட்டாரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவா்-மாணவிகள் குடிப்பதற்காக பயன்படுத்தி வந்த தண்ணீரையும் அதிகாரிகள் பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனா். அந்த உணவு விடுதியிலிருந்து 6 சமையல் எரிவாயு உருளைகளை வருவாய்த் துறையினா் பறிமுதல் செய்தனா்.