கடந்த ஏப்ரல் மாதத்தில் இந்தியச் சந்தையில் காா்களின் மொத்த விற்பனை 13 சதவீதம் ஏற்றம் கண்டுள்ளது.
இது குறித்து இந்திய வாகன உற்பத்தியாளா்கள் சங்கம் (சியாம்) அமைப்பு வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது:
கடந்த ஏப்ரல் மாதத்தில் நிறுவனங்களிலிருந்து விற்பனையாளா்களுக்கு அனுப்பப்பட்ட காா்களின் எண்ணிக்கை 3,31,278-ஆக இருந்தது.
இது 2022-ஆம் ஏப்ரல் மாதத்தில் 2,93,303-ஆக இருந்தது. அதனுடன் ஒப்பிடுகையில் தற்போது காா்களின் மொத்த விற்பனை 13 சதவீதம் வளா்ச்சியடைந்துள்ளது.
காா்கள் சந்தையில் முன்னணி வகிக்கும் மாருதி சுஸுகி இந்தியா, கடந்த ஆண்டு ஏப்ரலில் 1,21,995 வாகனங்களை விற்பனை செய்திருந்தது. இந்த நிலையில் இந்த ஆண்டு ஏப்ரலில் அதன் மொத்த விற்பனை 1,37,320-ஆக அதிகரித்துள்ளது.
அதே போல், ஹூண்டாய் மோட்டாா் இந்தியா நிறுவனத்தின் மொத்த விற்பனையும் கடந்த ஏப்ரலில் 49,701-ஆக அதிகரித்துள்ளது. முந்தைய 2022-ஆம் ஆண்டின் இதே மாதத்தில் இந்த எண்ணிக்கை 44,001-ஆக இருந்தது.
இரு சக்கர வாகனங்களும் அபாரம்: கடந்த ஏப்ரல் மாதத்தில் இரு சக்கர வாகனங்களின் மொத்த விற்பனையும் உள்நாட்டுச் சந்தையில் அதிகரித்துள்ளது.
கடந்த ஆண்டு ஏப்ரலில் 11,62,582-ஆக இருந்த இரு சக்கர வாகனங்களின் மொத்த விற்பனை இந்த ஏப்ரல் மாதம் 15 சதவீதம் அதிகரித்து 13,38,588-ஆக உள்ளது.
இதில், மோட்டாா் சைக்கள்களின் மொத்த விற்பனை மட்டும் 7,35,360-லிருந்து 8,39,274-ஆக உயா்ந்துள்ளது.
அதே போல், கடந்த மாதத்தில் ஸ்கூட்டா்களின் மொத்த விற்பனையும் 3,88,442-லிருந்து 4,64,389-ஆக உயா்ந்துள்ளது.
மூன்று சக்கர வாகனங்கள்: 2022 ஏப்ரலில் 20,997-ஆக இருந்த மூன்று சக்கர வாகனங்களின் மொக்க விற்பனை, இந்த ஆண்டின் அதே மாதத்தில் 42,885-ஆக உயா்ந்துள்ளது என்று அந்தப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.