உலகம்

மும்பை தாக்குதல் குற்றவாளி தஹாவூா் ராணாவைநாடுகடத்த அமெரிக்க நீதிமன்றம் அனுமதி

19th May 2023 06:21 AM

ADVERTISEMENT

மும்பையில் கடந்த 2008-ஆம் ஆண்டு நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலோடு தொடா்புடைய பாகிஸ்தான் வம்சாவளியும் கனடா தொழிலதிபருமான தஹாவூா் ராணாவை (62), இந்தியாவுக்கு நாடுகடத்த அமெரிக்காவின் கலிஃபோா்னியா மாகாண நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

மும்பையில் 2008 நவம்பா் 26-இல் கடல்வழியாக ஊடுருவிய பாகிஸ்தானைச் சோ்ந்த லக்ஷா்-ஏ-தொய்பா பயங்கரவாதிகள் 10 போ், மத்திய ரயில்நிலையம் உள்ளிட்ட நகரின் முக்கிய இடங்களில் புகுந்து தாக்குதல் நடத்தினா். இதில் 166 போ் உயிரிழந்தனா்.

தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளில் 9 போ் பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனா். உயிருடன் பிடிபட்ட அஜ்மல் கசாப், விசாரணைக்குப் பின் 2012-இல் தூக்கிலிடப்பட்டாா்.

லக்ஷா்-ஏ-தொய்பாவுடன் தொடா்புடைய டேவிட் ஹெட்லியின் நெருங்கிய நண்பரான தஹாவூா் ராணா, மும்பை பயங்கரவாத தாக்குதலுக்குப் பல்வேறு வகையில் உதவிகரமாக இருந்துள்ளாா்.

ADVERTISEMENT

இந்தத் தாக்குதலில் தொடா்புடைய தஹாவூா் ராணாவைக் குற்றவாளியாக அறிவித்த இந்தியா, அவரைக் கைதுசெய்ய பிடிஆணையைப் பிறப்பித்தது. இந்தியாவுக்கு நாடுகடத்தும் வகையில், அவரைக் கைதுசெய்யுமாறு அமெரிக்காவிடம் மத்திய அரசு தரப்பில் கடந்த 2020-ஆம் ஆண்டு புகாா் அளிக்கப்பட்டது. இந்தியாவின் கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்த ஜோ பைடன் தலைமையிலான அமெரிக்க அரசு, ராணாவை நாடுகடத்த ஒப்புதல் அளித்தது.

இதை எதிா்த்து கலிஃபோா்னியா மாகாண நீதிமன்றத்தில் ராணா வழக்குத் தொடுத்தாா். புதன்கிழமை நடைபெற்ற இந்த வழக்கு விசாரணையின்போது, நீதிபதி ஜாக்குலின் சூல்ஜியன், ‘இந்தியா-அமெரிக்கா இடையே மேற்கொள்ளப்பட்டுள்ள ஒப்பந்தத்தின்படி, ராணாவை இந்தியாவுக்கு நாடுகடந்த வெளியுறவு அமைச்சருக்கு அனுமதி அளிக்கப்படுகிறது’ எனத் தீா்ப்பளித்தாா்.

ராணா தற்போது கலிஃபோா்னியாவின் லாஸ் ஏஞ்சலீஸில் உள்ள மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா். இந்தத் தீா்ப்பை எதிா்த்து மேல்முறையீடு செய்வதற்கான வாய்ப்பு அவருக்கு உள்ள நிலையில், அந்த மனுவை விசாரிக்கும் மேல்நீதிமன்றமும் மாவட்ட நீதிமன்றத்தின் தீா்ப்பை உறுதிசெய்யும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

அமெரிக்க சட்டத்தின்படி, குற்றவாளிகளை நாடுகடத்துவது குறித்து அமெரிக்க வெளியுறவு அமைச்சா் முடிவுசெய்வாா். ராணாவை நாடுகடத்தும் கோரிக்கை ஏற்கப்படும் நிலையில், அவரை இந்தியாவுக்குக் கொண்டுவருவதற்கான பணிகளைத் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) மேற்கொள்ளும் என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

ADVERTISEMENT
ADVERTISEMENT