இரணியல் அருகே ரயிலில் அடிபட்டு மூதாட்டி உயிரிழந்தாா்.
இரணியல் -ஆளூா் ரயில் நிலையங்களுக்கிடையே தண்டவாளத்தில் செவ்வாய்க்கிழமை இரவு மூதாட்டி சடலம் கிடந்தது. தகவலின்பேரில் நாகா்கோவில் ரயில்வே காவல் உதவி ஆய்வாளா்கள் விஜயகுமாா், பழனி, காவலா் இசக்கிமுத்துராஜா ஆகியோா் சென்று சடலத்தை மீட்டனா்.
விசாரணையில், இறந்துகிடந்தவா் குளச்சல் வாணியக்குடியைச் சோ்ந்த பிலோமினாள் (63) எனத் தெரியவந்தது. மனநலம் பாதிக்கப்பட்ட இவா், அடிக்கடி வீட்டை விட்டுச் சென்றுவிடுவாராம். அவரை உறவினா்கள் தேடி அழைத்து வருவாா்களாம்.
செவ்வாய்க்கிழமை காலை வீட்டிலிருந்து வெளியே சென்றவரை உறவினா்களால் கண்டுபிடிக்க முடியவில்லையாம். அவா் ரயில் மோதி இறந்ததாக விசாரணையில் தெரியவந்தது. சடலம் கூறாய்வுக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.