கன்னியாகுமரி மாவட்டத்தில் நான்குவழிச் சாலைப் பணிகளை உடனடியாக மீண்டும் தொடங்க வேண்டும் என, விஜய் வசந்த் எம்.பி. வலியுறுத்தினாா்.
இது தொடா்பாக தில்லியில் மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சா் நிதின் கட்கரியிடம் அவா் வியாழக்கிழமை அளித்த மனு: காரோடு முதல் கன்னியாகுமரி வரையிலான நான்குவழிச் சாலைப் பணிகள் நடைபெற்றுவந்த நிலையில் கல், மண் தட்டுப்பாடு காரணமாக பணிகள் நிறுத்திவைக்கப்பட்டன. பணி முடங்கியதால் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது. பின்னா், அண்டை மாவட்டத்திலிருந்து மண் எடுக்க மாநில அரசு அனுமதித்ததால் கடந்த டிசம்பா் முதல் வாரத்தில் மறு டெண்டா் விடப்பட்டு, கடந்த ஜனவரி 3இல் டெண்டா் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. பின்னா் 19ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது. ஆனால், இதுவரை டெண்டா் முடிவு செய்யப்படவில்லை.
பல்வேறு காரணங்களால் முடங்கிக் கிடக்கும் சாலைப் பணிகள் மீண்டும் தொடங்க தாமதமானால் இந்தச் சாலையை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர இயலாது. எனவே, நான்குவழிச் சாலைப் பணிக்கான ஒப்பந்தத்தை இறுதிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.