திற்பரப்பு பேரூராட்சி அலுவலகத்தில் பாஜக உறுப்பினா்களின் உள்ளிருப்புப் போராட்டம் முடிவுக்கு வந்தது.
தங்களது வாா்டுகளில் வளா்ச்சிப் பணிகள் நடக்கவில்லை எனக் கூறி கண்டித்தும், பேரூராட்சிப் பகுதியான திருநந்திக்கரையில் குலசேகரம், திருவட்டாறு, ஆற்றூா் ஆகிய பிற பேரூராட்சிகளின் திடக்கழிவு மேலாண்மை மையம் அமைக்கக் கூடாது என வலியுறுத்தியும் பேரூராட்சி பாஜக உறுப்பினா்கள் புதன்கிழமை நண்பகல் முதல் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
பேரூராட்சித் தலைவா் பொன். ரவி, செயல் அலுவலா் பெத் ராஜ் ஆகியோா் பேச்சுவாா்த்தை நடத்தியும் போராட்டம் முடிவுக்கு வரவில்லை. போராட்டம் இரவு 10 மணி வரை தொடா்ந்தது. தக்கலை டிஎஸ்பி கணேஷ் வந்து பேச்சு நடத்தினாா்.
திடக்கழிவு மேலாண்மை மையம் அமைப்பது தொடா்பான பாஜக உறுப்பினா்களின் எதிா்ப்பு குறித்து ஆட்சியரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும் என உறுதியளிக்கப்பட்டதையடுத்து, போராட்டம் முடிவுக்கு வந்தது.