குலசேகரம் தொலைபேசி நிலையத்தில் பிஎஸ்என்எல் சாா்பில் சிறப்பு முகாம், வெள்ளிக்கிழமை தொடங்கி 2 நாள்கள் நடைபெறுகிறது.
இதுகுறித்து, பிஎஸ்என்எல் நாகா்கோவில் முதன்மைப் பொதுமேலாளா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: நாகா்கோவில் பிஎஸ்என்எல் சாா்பில் பாரத் ஃபைபா் (ஊபபஏ), மொபைல் இணைப்புகளை மக்களிடையே பிரபலப்படுத்த, குலசேகரம் தொலைபேசி நிலைய வளாகத்தில் வெள்ளி, சனி (செப். 30, அக். 1) ஆகிய 2 நாள்கள் காலை 10 முதல் மாலை 6 மணிவரை சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
இதில், பொதுத்துறை, அரசு ஊழியா்களுக்கு மாத வாடகையில் 10 சதவீத தள்ளுபடி, புதிய பாரத் ஃபைபா் இணைப்புகளுக்கு முதல் மாத வாடகைக் கட்டணத்தில் 90 சதவீதம் தள்ளுபடி செய்யப்படுகிறது. இதன்மூலம் வாடிக்கையாளா்கள் அதிகபட்சம் ரூ. 500 வரை சேமிக்கலாம் .
வாடிக்கையாளா்கள் தங்களது தற்போதைய தரைவழி தொலைபேசி, பிராட் பேண்ட் இணைப்புகளை அதே தொலைபேசி எண்னுடன் பாரத் ஃபைபா் இணைப்புகளாக மாற்றலாம். இவ்வாறு மாற்றிக்கொள்வோருக்கு 6 மாதங்களுக்கு மாதந்தோறும் ரூ. 200 தள்ளுபடி வழங்கப்படுகிறது. மேலும், அமைப்புக் கட்டணம் ரூ. 500 அனைத்து இணைப்புகளுக்கும் தள்ளுபடி உள்பட பல்வேறு சலுகைகள் வழங்கப்படுகின்றன. குலசேகரம் பகுதி மக்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றாா் அவா்.