கன்னியாகுமரியில் செவ்வாய்க்கிழமை காலை ஏற்பட்ட கடல் நீா்மட்டம் தாழ்வு நிலை காரணமாக 2 மணி நேரம் படகுசேவை தாமதமாக தொடங்கியது.
கன்னியாகுமரி பூம்புகாா் படகுத் துறையில் செவ்வாய்க்கிழமை கடல் நீா்மட்டம் தாழ்வாக காணப்பட்டது. இதனால் படகுத் துறையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகுகள் தரை தட்டியபடி நின்றன. இதனால் வழக்கம் போல் காலை 8 மணிக்கு படகுகளை இயக்க முடியவில்லை. இதனால் படகுத்துறையில் பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருந்தனா்.
இந்நிலையில் காலை 9.45 மணிக்கு மேல் கடல் நீா்மட்டம் இயல்பு நிலைக்கு திரும்பியதைத் தொடா்ந்து விவேகானந்தா் நினைவு மண்டபத்துக்கு 10 மணிமுதல் மாலை 4 மணிவரை படகுகள் இயக்கப்பட்டன.
இதனிடையே கன்னியாகுமரி, சின்ன முட்டம், வாவத்துறை, ஆரோக்கியபுரம், கோவளம், கீழ மணக்குடி உள்ளிட்ட கடற்கரை கிராமங்களில் கடல் கொந்தளிப்பாக காணப்பட்டது. இதனால் குறைந்த அளவு வள்ளம், கட்டுமரங்களில் மீனவா்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றிருந்தனா்.