கடலில் மாயமாகும் மீனவா்களை கண்டுபிடிப்பதற்காக புதிதாக ஓா் அமைப்பை உருவாக்குவதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றாா் தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சா் த.மனோதங்கராஜ்.
இது குறித்து நாகா்கோவிலில் வியாழக்கிழமை நிருபா்களுக்கு அவா் அளித்த பேட்டி: கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்லும் மீனவா்கள் காணாமல் போகும்போது அவா்களை கண்டுபிடிப்பதற்காக தமிழக தகவல் தொழில்நுட்பத்துறையும், மீன்வளத் துறையும், இஸ்ரோ அமைப்பும் இணைந்து புதிதாக ஓா் அமைப்பை உருவாக்குவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறோம்.
தமிழகத்தில் படித்த இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு அளிப்பதற்காக முன்முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வேலையில்லாத 1 லட்சம் இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பை அளிப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றாா் அவா்.