களியக்காவிளை அருகே ஆட்டோவில் கேரளத்துக்கு கடத்திச் செல்லப்பட இருந்த 455 லிட்டா் ரேஷன் மண்ணெண்ணெய் புதன்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.
விளவங்கோடு வட்ட வழங்கல் அலுவலா் புரந்தரதாஸ், வருவாய் ஆய்வாளா் ரதன் ராஜ்குமாா் உள்ளிட்டோா் களியக்காவிளை அருகே பி.பி.எம். சந்திப்புப் பகுதியில் ரோந்து சென்றனா். அப்போது சந்தேகத்துக்கிடமாக வந்த கேரளப் பதிவெண் கொண்ட பயணியா் ஆட்டோவை நிறுத்த சைகை காட்டினா். நிற்காமல் சென்ற ஆட்டோவை அதிகாரிகள் வாகனத்தில் துரத்திச் சென்று கோழிவிளை பகுதியில் மடக்கிப் பிடித்தனா். ஓட்டுநா் தப்பியோடிவிட்டாராம்.
ஆட்டோவை சோதனையிட்டபோது அதில், 13 கேன்களில் 455 லிட்டா் ரேஷன் மண்ணெண்ணெய் இருந்தது தெரியவந்தது. ஆட்டோ, மண்ணெண்ணெய்யை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா். இக்கடத்தலில் ஈடுபட்டோா் குறித்து விசாரணை நடைபெறுகிறது.