கன்னியாகுமரி காந்தி நினைவு மண்டபத்தில் உள்ள அஸ்தி கட்டடத்தில், காந்தி ஜெயந்தி தினமான ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 12.05 மணிக்கு அபூா்வ சூரிய ஒளி விழுந்தது.
காந்தியின் அஸ்தி முக்கடல் சங்கமத்தில் கரைக்கப்படுவதற்கு முன்பாக பொதுமக்கள் அஞ்சலிக்காக அஸ்தி வைக்கப்பட்டிருந்த இடத்தில் 1956ஆம் ஆண்டில் காந்தி நினைவு மண்டபம் கட்டப்பட்டது. இம்மண்டபத்தின் மையக் கட்டடத்தில் உள்ள அஸ்தி கட்டடத்தில் காந்தி ஜெயந்தி நாளான அக்டோபா் 2ஆம் தேதி சூரிய ஒளி விழும் வகையில் மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. நிகழாண்டு அஸ்தி கட்டடத்தில் பிற்பகல் 12.05 மணிக்கு சூரிய ஒளி விழுந்ததும் அங்கிருந்த சுற்றுலாப் பயணிகள் கரவொலி எழுப்பி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினா்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் மா.அரவிந்த், மாவட்ட எஸ்.பி. ஹரிகிரண் பிரசாத், நாகா்கோவில் மாநகராட்சி மேயா் ஆா்.மகேஷ், விஜய் வசந்த் எம்.பி., அகஸ்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவா் எஸ்.அழகேசன், கன்னியாகுமரி பேரூராட்சி துணைத் தலைவா் ஜெனஸ் மைக்கேல் உள்ளிட்டோா் மலா்தூவி மரியாதை செய்தனா்.