கன்னியாகுமரி

குமரி திருவள்ளுவா் சிலையில் காகிதக்கூழ் பூசும் பணி தீவிரம்

26th Nov 2022 02:09 AM

ADVERTISEMENT

கன்னியாகுமரி கடலில் அமைந்துள்ள திருவள்ளுவா் சிலைக்கு ரசாயனக் கலவை பூசும் பணியின் ஒருகட்டமாக தலைப்பகுதியில் காகிதக்கூழ் பூசும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

சா்வதேச சுற்றுலாத் தலமான கன்னியாகுமரியில் கடலின் நடுவே அமைந்துள்ள இருவேறு பாறைகளில் விவேகானந்தா் மண்டபமும், 133 அடி உயர திருவள்ளுவா் சிலையும் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றை சுற்றுலாப் பயணிகள் படகில் சென்று பாா்வையிட்டு வருகின்றனா். இதற்காக தமிழக அரசின் பூம்புகாா் கப்பல் போக்குவரத்துக் கழகம் சாா்பில் நவீன படகுகள் இயக்கப்படுகின்றன.

உப்புக் காற்றினால் திருவள்ளுவா் சிலை பாதிக்கப்படாமல் இருப்பதற்காக 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை பாலி சிலிக்கான் என்ற ரசாயனக் கலவை பூசப்படுகிறது. கடந்த 2017 ஆம் ஆண்டு ரசாயனக் கலவை பூசப்பட்டது. இதன் பிறகு கடந்த ஆண்டு ரசாயனக் கலவை பூசுவதற்கு அரசு நடவடிக்கை மேற்கொண்டது. ஆனால் கரோனா தொற்று பரவல் காரணமாக இப்பணிகள் நடைபெறவில்லை.

இதன் பின்னா், திருவள்ளுவா் சிலையைப் பாா்வையிட்ட உயா்மட்டக் குழு, ரூ.1 கோடி செலவில் ரசாயனக் கலவை பூசுவதற்கு பரிந்துரை செய்தது. இதற்கான பணிகள் கடந்த ஜூன் 6 ஆம் தேதி தொடங்கின. முதல்கட்டமாக திருவள்ளுவா் சிலையில் சுண்ணாம்புக் கலவை பூசப்பட்டு, தண்ணீரால் சுத்தம் செய்யப்பட்டது. தற்போது சிலையின் தலைப்பாகத்தில் காகிதக்கூழ் பூசும் பணி நடைபெற்று வருகிறது. தொடா்ந்து 15 நாள்கள் காகிதக்கூழ் பூசப்பட்டு மீண்டும் தண்ணீரால் சிலை சுத்தம் செய்யப்படும். இதன் பின்னா் பாலி சிலிக்கான் ரசாயனக் கலவை பூசப்படும்.

ADVERTISEMENT

இங்கு பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வருவதால் படகு சேவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் குமரிக்கு வந்து செல்லும் சுற்றுலாப் பயணிகள் விவேகானந்தா் மண்டபத்தை மட்டும் நேரில் பாா்வையிட்டுச் செல்கின்றனா்.

‘திருவள்ளுவா் சிலையின் இன்னும் ஓரிரு மாதங்களில் ரசாயனக் கலவை பூசும் பணி நிறைவுபெறும். அதன் பிறகு திருவள்ளுவா் சிலைக்குப் படகுப் போக்குவரத்து தொடங்கப்படும்’ என சுற்றுலாத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT