கன்னியாகுமரி

கேரளத்துக்கு கடத்த முயன்ற 16 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

15th Nov 2022 01:40 AM

ADVERTISEMENT

கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளை அருகே லாரியில் கேரளத்துக்கு கடத்திச் செல்ல முயன்ற 16 டன் ரேஷன் அரிசியை போலீஸாா் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா்.

களியக்காவிளை காவல் உதவி ஆய்வாளா் முத்துகுமரன் தலைமையில் போலீஸாா் திருத்துவபுரம் பகுதியில் வாகன கண்காணிப்பில் ஈடுபட்டனா். அப்போது சந்தேகப்படும் வகையில் கேரளம் நோக்கி வந்த லாரியை தடுத்து நிறுத்தினா். லாரி ஓட்டுநா் அங்கிருந்து தப்பியோடிவிட்டாா்.

தொடா்ந்து போலீஸாா் லாரியை சோதனையிட்டனா். அதில் 16 டன் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்ததும் அவற்றை கேரளத்துக்கு கடத்திச் செல்ல முயன்றதும் தெரியவந்தது.

விசாரணையில், அவை தூத்துக்குடியில் இருந்து கேரளத்துக்கு கடத்திச் செல்ல முயன்றது தெரியவந்தது. போலீஸாா் ரேஷன் அரிசியுடன் லாரியை பறிமுதல் செய்து காவல் நிலையம் கொண்டு சென்று விசாரணை மேற்கொண்டனா்.

ADVERTISEMENT

தொடா்ந்து மேற்கொண்ட சோதனையில் அப்பகுதி வழியாக பாரம் ஏற்றி வந்த மற்றொரு லாரியை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனா். அதில் 10 டன் அளவில் அரிசி இருந்தது தெரியவந்தது. ஓட்டுநரிடம் மேற்கொண்ட விசாரணையில் அவை தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஆலையிலிருந்து அரிசி ஏற்றிச் செல்வதாகவும் அதற்கான ஆவணங்களையும் காட்டினாா். இதில் சந்தேகமடைந்த போலீஸாா் அவை ரேஷன் அரிசியா என்பதை கண்டறிய லாரியுடன் அரிசியை கைப்பற்றி நாகா்கோவிலில் உள்ள உணவுப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.

அவா்கள் மேற்கொண்ட பரிசோதனையில் அவை ரேஷன் அரிசி அல்ல என்பது தெரியவந்தது. இதையடுத்து லாரியுடன் கைப்பற்றப்பட்ட ரேஷன் அரிசியை போலீஸாா் விடுவித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT