அகஸ்தீசுவரம் பேரூராட்சிக்குள்பட்ட கவற்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி திங்கள்கிழமை தொடங்கியது.
அகஸ்தீசுவரம் பேரூராட்சிக்குள்பட்ட கவற்குளம் நூற்றுக்கணக்கான ஏக்கா் விவசாய நிலங்களுக்கும், பொதுமக்கள் பயன்பாட்டுக்கும் நீராதாரமாக விளங்குகிறது. இக்குளத்தில் ஆகாயத்தாமரை மற்றும் செடி, கொடிகள் சூழ்ந்து காணப்பட்டது. இதனை அகற்றி குளத்தை ஆழப்படுத்தவேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தி வந்தனா். மேலும் விஜய்வசந்த் எம்.பியிடம் கோரிக்கை மனு அளித்தனா்.
இந்நிலையில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று கவற்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி திங்கள்கிழமை தொடங்கியது. இந்நிகழ்ச்சிக்கு அகஸ்தீசுவரம் பேரூராட்சி முன்னாள் தலைவா் சந்தையடி எஸ்.பாலகிருஷ்ணன் தலைமை வகித்தாா். இப்பணியை பேரூராட்சி தலைவி அன்பரசி ராமராஜன் தொடங்கிவைத்தாா்.
இதில் பேரூராட்சி துணைத் தலைவா் சரோஜா, பேரூா் திமுக செயலா் பாபு, காங்கிரஸ் நகர தலைவா் கிங்ஸ்லி, பேரூராட்சி கவுன்சிலா்கள் பிரேம்ஆனந்த், ராகவன், ஆதிலிங்கபெருமாள், செல்வராஜ், குமரேசன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.