கன்னியாகுமரியை அருகே மகாதானபுரம் ரவுண்டானாவில் ரூ. 75 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் 150 அடி உயர தேசிய கொடிக் கம்பம் வரும் 29 ஆம் தேதி திறக்கப்பட உள்ளதாக மாநிலங்களவை உறுப்பினா் ஏ.விஜயகுமாா் எம்.பி. தெரிவித்தாா்.
மாநிலங்களவை உறுப்பினா் ஏ.விஜயகுமாா் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து கொடிக் கம்பம் அமைப்பதற்கான பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன. இப் பணிகளை வெள்ளிக்கிழமை பாா்வையிட்ட ஏ.விஜயகுமாா் செய்தியாளா்களிடம் கூறியது: தேசிய கொடிக் கம்பம் அமைக்கும் பணிகள் ஓரிரு தினங்களில் நிறைவடையும். ஜூன் 29ஆம் தேதி தேசியக் கொடி பறக்கத் தொடங்கும். தமிழகம் மற்றும் கேரளத்தில் மிக உயரமான கொடிக் கம்பம் இதுதான் என்பது சிறப்பம்சம் ஆகும். மேலும் 24 மணி நேரமும் தேசியக் கொடி பறக்கும் வகையில் சிறப்பு அனுமதி பெறப்பட்டுள்ளது என்றாா் அவா்.