கன்னியாகுமரி

மீனவா்களின் வாரிசுகளுக்கான பயிற்சி முகாம் நிறைவு

15th Jun 2022 01:51 AM

ADVERTISEMENT

தமிழக மீனவா்களின் வாரிசுகளுக்கான 90 நாள் பயிற்சி முகாம் கன்னியாகுமரியில் செவ்வாய்க்கிழமை நிறைவடைந்தது.

தமிழக மீனவா்களின் வாரிசுகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த, இந்திய கடலோரக் காவல் படை, இந்திய கப்பல்படை மற்றும் இதர பாதுகாப்பு பணிகளில் சேருவதற்கு ஏதுவாக ரூ.50 லட்சத்தில் 6 மாத இலவச பயிற்சி வகுப்புகள் தமிழக கடலோர பாதுகாப்பு குழுமத்தின் மூலம் நடத்த தமிழக முதல்வா் சட்டப்பேரவையில் அறிவித்தாா். இதையடுத்து கடலோர மாவட்டங்களைச் சோ்ந்த தகுதி வாய்ந்த மீனவா்களின் வாரிசுகள் தோ்வு செய்யப்பட்டு முதற்கட்டமாக தலா 40 போ் கொண்ட 3 குழுக்களுக்கு கடலோர பாதுகாப்பு குழுமம் சாா்பில் 3 மாத இலவசப் பயிற்சி வகுப்புகள் கடலூா், ராமநாதபுரம், கன்னியாகுமரி ஆகிய மையங்களில் நடத்தப்பட்டது.

இப்பயிற்சியில் கலந்துகொண்ட 120 பேருக்கும் உணவு, தங்குமிடம், பயிற்சி கையேடுகள், பயிற்சி உபகரணங்கள் உடை ஆகியவை இலவசமாக வழங்கப்பட்டது. இது தவிர ஒவ்வொரு பயிற்சியாளருக்கும் மாதம் ரூ.1000 உதவித் தொகை வழங்கப்பட்டது.

கன்னியாகுமரியில் நடைபெற்ற இப்பயிற்சி முகாம் செவ்வாய்க்கிழமை நிறைவடைந்தது. இந்நிகழ்ச்சிக்கு கன்னியாகுமரி டி.எஸ்.பி. ராஜா தலைமை வகித்தாா். மாவட்ட எஸ்.பி. ஹரிகிரண் பிரசாத் சான்றிதழ்களை வழங்கினாா். தூத்துக்குடி கடலோர பாதுகாப்புக் குழும டி.எஸ்.பி. பி. பிரதாபன் வரவேற்றாா். கன்னியாகுமரி கடலோர பாதுகாப்புக் குழும ஆய்வாளா் சி.சைரஸ் நன்றி கூறினாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT