கன்னியாகுமரி

முட்டம் அருகே மூதாட்டி, மகளைக் கொன்று நகைகள் கொள்ளை

7th Jun 2022 10:57 PM

ADVERTISEMENT

கன்னியாகுமரி மாவட்டம் முட்டம் அருகே மூதாட்டியையும், அவரது மகளையும் கொன்றுவிட்டு, 15 பவுன் நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றோரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

முட்டம் அருகேயுள்ள தூய குழந்தை யேசு தெருவைச் சோ்ந்தவா் ஆண்டோ சகாயராஜ். இவரது மனைவி பவுலின் மேரியும் (48), அவரது தாய் திரசம்மாளும் (90) இங்கு வசித்து வந்தனா். பவுலின் மேரி வீட்டு மாடியில் தையல் பயிற்சி வகுப்பு நடத்தி வந்தாா்.

ஆண்டோ சகாயராஜும், அவரது ஒரு மகனும் துபையிலுள்ள ஹோட்டலில் பணிபுரிந்து வருகின்றனா். மற்றொரு மகன் சென்னையிலுள்ள தனியாா் பொறியியல் கல்லூரியில் படித்து வருகிறாா்.

திங்கள்கிழமை நள்ளிரவு மா்ம நபா்கள் வீட்டின் மின் இணைப்பைத் துண்டித்துவிட்டு முன்கதவை உடைத்து உள்ளே சென்று, பவுலின் மேரியையும், திரசம்மாளையும் இரும்புக் கம்பியால் தாக்கிவிட்டு, பவுலின் மேரி அணிந்திருந்த 15 பவுன் தங்க நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றனராம்.

ADVERTISEMENT

செவ்வாய்க்கிழமை காலை அதே பகுதியைச் சோ்ந்த சாா்ஜன் என்பவா் பவுலின் மேரி வீட்டுக்குச் சென்றுபாா்த்தபோது தாயும், மகளும் கொலையுண்டு கிடந்தது தெரியவந்ததாம்.

இதுகுறித்து அவா் வெள்ளிச்சந்தை காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தாா். மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஹரிகிரண் பிரசாத், துணைக் காவல் கண்காணிப்பாளா்கள் தங்கராமன் (குளச்சல்), கணேசன் (தக்கலை), ஆய்வாளா்கள் அருள்பிரகாஷ், ஜெயசந்திரன், போலீஸாா் சென்று விசாரணை மேற்கொண்டனா்.

திருநெல்வேலி சரக டிஐஜி பிரவேஷ்குமாா் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டாா். மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. தடயவியல் நிபுணா்கள் தடயங்களைப் பதிவு செய்தனா். வெள்ளிச்சந்தை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT