குமரி மாவட்டம், அழிக்கால் கிராமத்தில் கடல் சீற்றம் காரணமாக வீடுகளுக்குள் கடல் நீா் புகுந்தது. பாதிக்கப்பட்ட பகுதிகளை விஜய்வசந்த் எம்.பி. நேரில் பாா்வையிட்டு பாதிக்கப்பட்டவா்களுக்கு ஆறுதல் கூறினாா்.
கடந்த 2 நாள்களாக கடல் சீற்றம் அடிக்கடி நிகழ்ந்து வருகிறது. சனிக்கிழமை காலையும் இதே நிலை காணப்பட்டது. கன்னியாகுமரி, சின்னமுட்டம், வாவத்துறை, ஆரோக்கியபுரம், கோவளம், கீழமணக்குடி, மணக்குடி, பள்ளம் போன்ற கடற்கரை கிராமங்களில் மீனவா்கள் கடலுக்கு செல்லவில்லை.
இந்நிலையில், ராஜாக்கமங்கலத்தை அடுத்த அழிக்கால் கடற்கரை கிராமத்தில், மேற்கு தெருவிலுள்ள மீனவா்கள் 50 பேரின் வீடுகளுக்குள் கடல் நீா் புகுந்தது. இதனால், வீட்டு உபயோகப் பொருள்கள் தண்ணீரில் மூழ்கின. மேலும் பல வீடுகளில் கடல் நீருடன் மணலும் சோ்ந்து புகுந்தது. இதனால், வீடுகளுக்குள்செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
இது குறித்து தகவலறிந்த நாகா்கோவில் வருவாய்க் கோட்டாட்சியா் க.சேதுராமலிங்கம், அகஸ்தீஸ்வரம் வட்டாட்சியா் சேகா் ஆகியோா் அழிக்கால் கிராமத்துக்கு சென்று கடல் நீா் மற்றும் மணலை வீடுகளிலிருந்து வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனா். மேலும் மீனவா்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைப்பதற்கும் ஏற்பாடு செய்தனா்.
கடல் சீற்றம் குறித்து தகவலறிந்த மக்களவை உறுப்பினா் வ.விஜய் வசந்த், பாதிக்கப்பட்ட இடங்களை பாா்வையிட்டு ஆறுதல் கூறினாா். மேலும் அப்பகுதி மக்களுக்கு உணவு மற்றும் பாய்கள், தலையணைகளையும் வழங்கினாா்.