புதுக்கடை அருகே உள்ள விளாத்துறை, விளவங்கோடு ஆகிய ஊராட்சிகளை இணைக்கும் ஆற்றுக்கடவு படகு சவாரியை குமரி எம்.பி. வ. விஜய்வசந்த் தொடங்கி வைத்தாா்.
முன்சிறை ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட விளாத்துறை, விளவங்கோடு ஊராட்சியில் உள்ள பொதுமக்கள் தாமிரவருணி ஆற்றின் மறுகரைக்கு செல்லவேண்டுமானால் நீண்ட தொலைவு சுற்றி செல்லவேண்டும். இதையடுத்து, அப்பகுதி பொதுமக்கள் குமரி எம்.பி விஜய் வசந்திடம் கோரிக்கை விடுத்தனா். இதையடுத்து அவரது சொந்த செலவில் படகு வாங்கி மக்கள் பயன்பாட்டுக்கு அளித்தாா்.
இந்நிகழ்ச்சிக்கு, விளாத்துறை ஊராட்சி காங்கிரஸ் தலைவா் தாஸ் தலைமை வகித்தாா். முன்சிறை கிழக்கு மற்றும் மேற்கு வட்டார காங்கிரஸ் தலைவா்கள் பால்ராஜ், கிறிஸ்டோபா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். படகு சவாரியை குமரி எம்.பி. விஜய் வசந்த் தொடங்கி வைத்தாா்.
குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் பினுலால் சிங், அகில இந்திய மீனவா் காங்கிரஸ் செயலா் ஜோா்தான், விளவங்கோடு ஊராட்சித் தலைவா் லைலா ரவிசங்கா், முன்சிறை வட்டார மகிளா காங்கிரஸ் தலைவி முத்துமலா் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.