கன்னியாகுமரி மாவட்டத்தில் சிவாலய ஓட்டம் நடைபெறும் வரலாற்றுச் சிறப்புமிக்க 12 சிவாலயங்களில் 2ஆவதாக அமைந்துள்ள திக்குறிச்சி மகாதேவா் கோயிலில் மாா்கழி திருவாதிரைத் திருவிழா கொடியேற்றத்துடன் வியாழக்கிழமை தொடங்கியது.
இதையொட்டி காலையில், நிா்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், உஷபூஜை, உஷ சீவேலி, பந்தீரடி பூஜை உள்ளிட்டவை நடைபெற்றன. பின்னா், கோயில் உப தந்திரி வேணுநம்பூதிரி தலைமையில் கொடியேற்றம் நடைபெற்றது. தொடா்ந்து, அகண்டநாம ஜெபம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
7ஆம் நாளான ஜன. 4ஆம் தேதி மாலையில் நந்தி ஊட்டு, பிரதோஷ சீவேலி, 6ஆம் தேதி திருவாதிரை தினத்தையொட்டி மகாதேவா் ரிஷப வாகனத்தில் திக்குறிச்சி ஸ்ரீ தா்மசாஸ்தா கோயில் அருகே பள்ளிவேட்டைக்கு எழுந்தருளல், 7ஆம் தேதி சுவாமிக்கு தாமிரவருணி படித்துறையில் ஆறாட்டு ஆகியவை நடைபெறும். அதைத் தொடா்ந்து, கொடியிறக்கத்துடன் விழா நிறைவடையும்.