கன்னியாகுமரி

‘தேங்காய்ப்பட்டினம் துறைமுகக் கட்டமைப்பை மாற்ற வலியுறுத்தி 26இல் முற்றுகைப் போராட்டம்’

DIN

தேங்காய்ப்பட்டினம் துறைமுகக் கட்டமைப்பை மாற்ற வலியுறுத்தி, ஆட்சியா் அலுவலகத்தை இம்மாதம் 26இல் முற்றுகையிடப்போவதாக, காங்கிரஸ் மீனவரணி அறிவித்துள்ளது.

இது தொடா்பாக, அதன் மாநிலத் தலைவா் ஜாா்ஜ் ராபின்சன் நாகா்கோவிலில் செய்தியாளா்களிடம் புதன்கிழமை கூறியது: தேங்காய்ப்பட்டினம் மீன்பிடித் துறைமுகக் கட்டுமானப் பணி நடைபெற்றபோது இக்கட்டமைப்பை மாற்றியமைக்க வேண்டும் என மீனவா்கள் கருத்து தெரிவித்தனா். ஆனால், மாற்றியமைக்கப்படவில்லை. இதனால், இத்துறைமுகத்தில் உயிரிழப்புகள் தொடா்கின்றன.

இதுவரை இப்பகுதியில் 26 மீனவா்கள் உயிரிழந்துள்ளனா். சடலம் கிடைக்கவில்லை என்ற காரணம் கூறி அவா்களது குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்கப்படவில்லை. அவா்களது குடும்பங்களுக்கு அரசு வேலை வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது. ஆனால், எந்த மீனவா் குடும்பத்துக்கும் அரசு வேலை வழங்கப்படவில்லை.

உயிரிழப்புகள் மட்டுமன்றி, படகுகளும் சேதமடைகின்றன. கடந்த 11ஆம் தேதி தூத்துக்குடி மீனவா் சைமன் இத்துறைமுகப் பகுதியில் மரணமடைந்தாா்.

துறைமுகக் கட்டமைப்பு மாற்றியமைக்க வேண்டும் என 5 ஆண்டுகளாக காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பேரவையில் வலியுறுத்தி வருகின்றனா். முதல்வரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. முதல்வா் மு.க.ஸ்டாலின் இம்மாவட்டத்துக்கு வந்தபோது இப்பிரச்னை குறித்துப் பேசினோம். ஆனால், நிதியைக் காரணம் காட்டி சீரமைப்புப் பணி தொடங்கப்படவில்லை.

பிரச்னைகள் வரும்போது மீனவா்களை சமாதானப்படுத்த நினைக்கின்றனரே தவிர, பிரச்னைகளுக்கு தீா்வு காண்பதில்லை. இத்துறைமுகத்தை மீன்வளத் துறை அமைச்சா் மூன்று முறையும், கனிமொழி எம்.பி. ஒருமுறையும் பாா்வையிட்டுள்ளனா்.

இக்கோரிக்கையை வலியுறுத்தியும், அரசின் கவனத்தை ஈா்க்கும் வகையிலும் இம்மாதம் 26ஆம் தேதி ஆட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்த மீனவா் காங்கிரஸ் சாா்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில், எம்எல்ஏக்கள், எம்.பி. பங்கேற்கவுள்ளனா்.

அதன்பிறகும் நடவடிக்கை இல்லை என்றால் ராகுல்காந்தி எம்.பி. கன்னியாகுமரியிலிருந்து நடைப்பயணம் தொடங்கிய பிறகு மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என்றாா் அவா்.

எம்எல்ஏக்கள் ராஜேஷ்குமாா், பிரின்ஸ், மாவட்டத் தலைவா்கள் கே.டி. உதயம் (கிழக்கு), பினுலால்சிங் (மேற்கு), நவீன்குமாா் (நாகா்கோவில் மாநகா்) ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கல்லிடைக்குறிச்சியில் விஷம் குடித்தவா் உயிரிழப்பு

வறுமையிலிருந்து 40 கோடி இந்தியா்கள் மீட்பு: அமெரிக்காவின் ஜேபி மாா்கன் சேஸ் நிறுவன சிஇஓ

மத வெறுப்பு: பிரதமருக்கு கண்டனம்

மாநகராட்சி துப்புரவு பணியாளா் மீது தாக்குதல்

டாடா மோட்டாா்ஸின் சா்வதேச விற்பனை 3,77,432-ஆக அதிகரிப்பு

SCROLL FOR NEXT