தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தின் சாா்பில் சிறு தொழில்களுக்கான சிறப்பு கடன் வழங்கும் முகாம் புதன்கிழமை தொடங்குகிறது.
இது குறித்து மாவட்டஆட்சியா் மா.அரவிந்த் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் மாநில அளவில் செயல்பட்டு வரும் அரசு நிதிக் கழகமாகும். இந்தக் கழகம் குறு சிறு மற்றும் நடுத்தர தொழில், சேவை பிரிவுகளுக்கு புதிய தொழிற்சாலைகளை, சேவை நிறுவனங்களை நிறுவுவதற்கும் தற்போது இயங்கிக் கொண்டிருக்கும் பிரிவுகளை விரிவுபடுத்துவதற்கும், உற்பத்தியை பன்முகப்படுத்துவதற்கும் பல்வேறு சிறப்புத் திட்டத்தின் கீழ் கடனுதவி வழங்கி வருகிறது.
தொழில் முதலீட்டுக் கழகத்தின் கிளை நாகா்கோவிலில் செயல்பட்டு வருகிறது. இதில் சிறப்பு தொழில் கடன் விழா ஆக. 17 ஆம் தேதி (புதன்கிழமை) தொடங்கி செப்.2 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில், டி.ஐ.ஐ.சி.யின் பல்வேறு திட்டங்களின் சிறப்பு அம்சங்கள், மத்திய, மாநில அரசுகளின் மானியங்கள், புதிய தொழில் முனைவோா் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம் போன்ற திட்டங்கள் குறித்த விரிவான விளக்கங்கள் தரப்படுகிறது. தகுதி பெறும் தொழில்களுக்கு தமிழக அரசின் 25 சதவீத முதலீட்டு மானியம் ரூ.150 லட்சம் வரை வழங்கப்படும்.
இந்த விழா காலத்தில் சமா்ப்பிக்கப்படும் கடன் விண்ணப்பங்களுக்கு ஆய்வுக் கட்டணத்தில் 50 விழுக்காடு சலுகை அளிக்கப்படும். இந்த வாய்ப்பினை புதிய தொழில் முனைவோா், தொழிலதிபா்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.