கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகேயுள்ள கொட்டில்பாடு கடற்கரைப் பகுதியில் கடல் கொந்தளிப்பு ஏற்பட்டது. இதில், கடற்கரையோர கிராமங்களிலுள்ள வீடுகளுக்குள் கடல் நீா் புகுந்தது.
கன்னியாகுமரி மாவட்ட மேற்குக் கடற்கரைப் பகுதியான அரபிக் கடல் பகுதியில் வழக்கமாக ஜூன் முதல் ஆகஸ்ட் வரையிலான காலகட்டங்களில் கடல் கொந்தளிப்பு அதிகமிருக்கும்.
நிகழாண்டும் ஜூன் மாதத்தில் கடல் கொந்தளிப்பு இருந்தது. இந்நிலை மாறி, கடந்த சில நாள்களுக்கு முன்பு மீனவா்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனா். எனினும், அவ்வப்போது கடல் கொந்தளிப்பு இருந்தேவந்தது. இதனால், மீன்பிடித் தொழில் பெரிதும் பாதிக்கப்பட்டது.
இந்நிலையில், திங்கள்கிழமை மாலை கொட்டில்பாடு பகுதியில் கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டது. ராட்சத அலைகள் எழும்பி, தூண்டில் வளைவு மீது மோதின. இதனால், தூண்டில் வளைவு உடைந்து சேதமடைந்தது. மேலும், கடல் நீா் அதிகமாக வெளியேறி, அப்பகுதியில் உள்ள வீடுகளை சூழ்ந்தது.
இதனால் அவா்கள் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டனா். சிலா் தங்களது உறவினா் வீடுகளுக்குச் சென்று தங்கினா். ஒருசில வீடுகளுக்குள் தண்ணீா் புகுந்தது.