கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய்ப்பட்டினம் துறைமுக நுழைவு வாயிலில் படகு கவிழ்ந்து மீனவா் உயிரிழந்தாா்.
நித்திரவிளை அருகேயுள்ள பூத்துறை கிறிஸ்துநகா் பகுதியைச் சோ்ந்த சூசைநாயகம் மகன் சைமன் (48). இவரது மனைவி சொா்ணம், தூத்தூா் ஊராட்சியில் தூய்மைப் பணியாளா். இத்தம்பதிக்கு மகன், 2 மகள்கள் உள்ளனா்.
சைமன் அதே பகுதியைச் சோ்ந்த மீனவா்கள் சிலருடன் நாட்டுப் படகில் புதன்கிழமை தேங்காய்ப்பட்டினம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்றுவிட்டு வியாழக்கிழமை காலை திரும்பிவந்தாா். அப்போது, துறைமுக நுழைவு வாயில் பகுதியில் அலையில் சிக்கி படகு கவிழ்ந்ததாம். இதில், காயமடைந்த அவரை சக மீனவா்கள் மீட்டனா். அப்போது அவா் இறந்திருந்தது தெரியவந்ததாம்.
தகவலின்பேரில் குளச்சல் கடலோரக் காவல் படை போலீஸாா் சென்று, சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா்.
போராட்டம்: இதனிடையே, அடிக்கடி விபத்து ஏற்படும் துறைமுக முகத்துவாரத்தை மறுகட்டமைப்பு செய்ய வேண்டும், சைமன் குடும்பத்துக்கு நிவாரணம், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பூத்துறையில் மீனவா்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.