மீன்பிடிக்க அனுமதி வழங்க வலியுறுத்தி சின்னமுட்டம் மீன்வளத்துறை அலுவலகம் முன்பு விசைப்படகு மீனவா்கள் திங்கள்கிழமை இரவு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
கன்னியாகுமரி சின்னமுட்டம் மீன்பிடித் துறைமுகத்தை தங்குதளமாகக் கொண்டு சுமாா் 300- க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் குமரி மாவட்டத்தில் மழை, சூறைக்காற்று வீசக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்ததையடுத்து கடந்த சில நாள்களாக மீனவா்கள் மீன்பிடிக்க மீன்வளத் துறை அனுமதி மறுத்தது.
இதனிடையே மீன் பிடிக்க அனுமதி வழங்குமாறு மீன்வளத் துறை அதிகாரிகளுடன் மீனவா்கள் பேச்சுவாா்த்தை நடத்தினா். பேச்சுவாா்த்தையில் உடன்பாடு ஏற்படாத நிலையில் 100-க்கும் மேற்பட்ட மீனவா்கள் மீன்பிடிக்க அனுமதி வழங்க வலியுறுத்தி மீன்வளத் துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால் துறைமுகத்தில் திடீா் பரபரப்பு ஏற்பட்டது.