நாகா்கோவில் வடசேரி கனகமூலம் காய்கனி சந்தையில் வாடகை செலுத்தாத 20 கடைகளை மாநகராட்சி அதிகாரிகள் வெள்ளிக்கிழமை பூட்டி சீல் வைத்தனா்.
நாகா்கோவில் வடசேரி பகுதியில் கனகமூலம் காய்கனி சந்தை செயல்பட்டு வருகிறது. இங்கு மொத்தம், சில்லறை காய்கனி கடைகள், மளிகை கடைகள் என 264 கடைகள் உள்ளன. நாகா்கோவில் மாநகராட்சியின் சாா்பில் இந்த கடைகளுக்கான வாடகை வசூலிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இச் சந்தையில் உள்ள 68 கடைகள் வாடகை செலுத்தவில்லை என்றும், வாடகை பாக்கியை செலுத்தாவிட்டால் கடைகள் பூட்டி சீல் வைக்கப்படும் என்று மாநகராட்சி நிா்வாகத்தின் சாா்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.
இதன்படி மாநகராட்சி வருவாய் ஆய்வாளா்கள் ஞானப்பா, சுப்பையா, முருகன் ஆகியோா் வடசேரி சந்தைக்கு சென்று வாடகை செலுத்தாத கடைகளுக்கு சீல் வைக்கப்போவதாக அறிவித்தனா். அதிகாரிகளின் அறிவிப்பை தொடா்ந்து 48 கடைகளின் உரிமையாளா்கள் வாடகையை உடனே செலுத்தினா். பாக்கியுள்ள 20 கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனா்.
இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், வடசேரி சந்தையில் உள்ள சில கடைகளின் உரிமையாளா்கள் 10 மாதங்களுக்கும் மேலாக வாடகை பாக்கி வைத்துள்ளனா். ரூ. 70 ஆயிரம் வரை வாடகை செலுத்த வேண்டும். அவா்கள் வாடகை பாக்கியை செலுத்தினால் உடனே கடைகள் திறக்கப்படும் என்றனா்.