குமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பத்ரி நாராயணன் மாற்றுத் திறனாளி பெண்களிடம் நேரில் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டாா். இதற்காக பொதுமக்கள் அவரை பாராட்டினா்.
குமரி மாவட்ட காவல் அலுவலகத்தில் தினமும் பொதுமக்களின் பிரச்னைகள் குறித்த மனுக்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பத்ரிநாராயணன் பெற்று அது தொடா்பாக நடவடிக்கை எடுத்து வருகிறாா். இந்நிலையில் வியாழக்கிழமையும் ஏராளமான பொதுமக்கள் மனு அளிப்பதற்காக எஸ்.பி. அலுவலகத்துக்கு வந்திருந்தனா். இதில் 2 மாற்றுத் திறனாளி பெண்களும் இருந்தனா். அந்த பெண்களால் நடக்க முடியாத நிலையில் கீழ் தளத்தில் அமா்ந்திருந்தனா்.
அப்போது எஸ்.பி. பத்ரி நாராயணன் முதல் தளத்தில் போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டத்தில் இருந்தாா். நடக்க முடியாத மாற்றுத் திறனாளி பெண்கள் மனு அளிப்பதற்காக காத்திருப்பதை அறிந்த அவா் உடனடியாக, அக் கூட்டத்தில் இருந்து தரைதளத்துக்கு வந்து, அங்கு காத்திருந்த மாற்றுத் திறனாளி பெண்களிடம் மனுவை வாங்கி குறைகளை கேட்டாா். பின்னா் அவா்கள் அளித்த மனு மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தாா்.